web counter

'முக'வரி

லேட்டஸ்ட் டிப்ஸ்
தொண்டை வறண்ட உணர்விருந்தாலோ அல்லது தாகம் எடுத்தாலோ, தண்ணீர்க் குடிக்கவும்...

லேட்டஸ்ட் பொன்மொழி
Blogல கேலண்டர் வைக்கலாம், ஆனா கேலண்டர்ல blog வைக்க முடியாது.

இதுக்கு முன்னாடி...

 

Powered By...

மீட்டர் ஏறாம மேட்டர தெரிஞ்சுக்க...
Use RSS feeds to save your valuable time

சாஃப்ட்வேர் பக் என்றால் என்ன?
04-08-2010 20:19:26

இந்த சாஃப்ட்வேர் பக்,சாஃப்ட்வேர் பக் என்கிறார்களே, அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூம் போட்டு யோசித்து, பல மாதங்கள் உழைத்து, உருவாக்கி பரிசோதித்து, பரிசோதித்து மீண்டும் உருவாக்கி என்று என்னனவோ செய்து மென்பொருள் உருவாக்குகிறார்கள். ஆனால் அது எப்படியோ பயன்படுத்தும்போது மட்டும் அது சரியில்லாமல், இது சரியில்லாமல் போய்விடுகிறது. அதுவாவது தேவலாம், திடீரென்று இயங்காமல் அப்படியே அந்தரத்தில் தொங்கி தொபேல் என்று விழுந்தேகூடவிடும். இன்னும் சில தூமகேதுக்கழிசடைகள் தேவையில்லாத இதரவேலைகளை எல்லாம் செய்யும்.

இவையெல்லாமே பக். நாமெல்லாம் 'பக்'கையே போர்வையா போத்திக்கிட்டு வாழறவங்கதானே என்று நினைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஒரு சில 'பக்'கின் தொல்லை தாங்கமுடிவதில்லை. கணிப்பொறியில் மென்பொருளின் 'பக்'கையாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டுவிடலாம். ஆனால் இந்த ஆண்டவன் பண்ணிய மென்பொருட்களில் உள்ள 'பக்' இருக்கே, மஹா இம்சை. இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் -பைரவா, ராத்திரி ரோட்ல போகும்போது பழிவாங்கிடாதே- நாய்.

இன்று இரவுகூட, பணி முடிந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். அங்கிங்கென்று பைரவர்க்கூட்டம் ஏதோ கட்சிமீட்டிங்கோ, பொதுக்கூட்டமோ நடத்திக்கொண்டிருந்தன. கவர்னர் மாளிகை வரையிலும்கூட அமைதியேவடிவாகத்தான் இருந்தது பூமி. அண்ணாசாலையருகில் திரும்பும்போதுதான், ஓரமாக அவர் நின்றுகொண்டிருந்தார். பெயர் கேட்கவில்லை. நாலுகாலில், வழக்கமான காட்டுராஜா போசில் என்னைப் பார்த்தபடியே இருந்தார். அண்ணலும் நோக்க, நானும் சைக்கிள் பெடலை மிதித்தபடியே நோக்க திடீரென்று அந்த நாய்க்கு இது நமக்கு மட்டுமேயான ரோடு என்று தோன்றியிருக்கவேண்டும். இரண்டுபேரும் சந்தித்த அந்த ஒரு புள்ளியிலிருந்து துரத்தலென்றால் துரத்தல் அப்படி ஒரு துரத்தல். வீடியோமொபைலில் யாராவது படமெடுத்து யூட்யூபில் போட்டிருந்தால், பாத்தவர்கள் ஏதோ ஹாலிவுட் படக்காட்சி என்று நிச்சயம் நம்பியிருப்பார்கள்.

உள்ளுக்குள் இருந்த பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நாய்க்கு கௌண்டர் குடுக்க நானும் 'ஏய், ஊய், வா வா. பிடி பார்க்கலாம்' என்று கத்தினேன். வாய்தான் கத்தியதே தவிர, கால்கள் வாயைவிட வேகமாக பெடலை மிதிக்க ஆரம்பித்தன. எனக்கும் பைரவருக்குமான தூரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்க, ஏறக்குறைய ஒரே வேகத்தில் ஓட ஆரம்பித்தோம். கடைசி ஆப்ஷனாக, ரோட்டை அப்படியே க்ராஸ் பண்ணி, பைரவரை ஏதோவொரு லாரி, காருக்கு நடுவில் திக்குமுக்காடவிட்டு 'எஸ்'சாகிவிடலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தேன். ஜீவகாருண்யமெல்லாம் பார்க்கமுடியாத சூழல். தன்னைக்கடிக்கவந்தால், நாயையும் கடிக்கலாம் என்பது க்ருபாநீதிசாஸ்திரம்.

அப்பொழுதுதான் எதிர்பாராத ஒரு க்ளைமேக்ஸ் நடந்தேறியது. கர்ணனுக்கு முக்கியமான நேரத்தில் ப்ரமாஸ்த்ரமந்திரம் மறந்துவிடும். எனக்கு ப்ராம்மாஸ்த்ர மந்திரமெல்லாம் வாயிலேயே நுழையாது என்றாலும், என் சைக்கிள் அந்த குறையை அவ்வப்போது தீர்த்துவைக்கும். எங்காவது முக்கியமான இடத்திற்கு அவசரமாகப் போகவேண்டும் என்றால் (ஹீ ஹீ... ஆபீசை சொல்லவில்லை), செய்ன் கழன்று கழுத்தை அறுக்கும். அப்புறம் கையில் க்ரீசோடும் கண்ணில் நீரோடும் போய்ச்சேர்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். நாயுடன் நடந்த ரேசில் சைக்கிள் மீண்டும் 'நீ என்னைதான் ஓட்டற' என்று காட்டிவிட்டது. செய்ன் கழன்று, பெடலுடன் இருந்த பந்தத்தை அறுத்தெறிந்து முக்தி அடைந்தது.

சரி, நம்ம கதை க்ளோஸ். இன்னிக்கு நாயோட மல்யுத்த பயிற்சியும் முடிந்துதான் வீட்டுக்கு என்று தெரிந்துவிட்டது. பைரவரும் நானும் ஒரே வேகத்தில் இருந்தாலும், சைக்கிளை ஓரம்கட்ட ஆரம்பித்தேன். முன்பெல்லாம் மென்பொருள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த காலத்தில், தோதுப்பட்ட ஒரு பயிற்சியகத்தில் இரவுநேரம் மட்டும் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. பில் கட்டுவது, மெய்ண்டனென்ஸ் பணம் வசூல் செய்வது, ஃபோன்பில் கட்டுவது, காய்கறி வாங்கித்தருவது என்று எடுபிடிவேலைகள் முடித்துவிட்டு இரவு 11, 12 மணிக்கு மேல் அந்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஒரு நாலைந்து மணிநேரம் கணிப்பொறியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்புறம் என்றாவது காலையில் அங்கே கொஞ்சம் சிற்சில பணிகள் செய்துதரவேண்டும். மற்றபடி இலவசம். இருந்தாலும் இரவில் சைக்கிளில் போகும்பொழுது அந்த தெருவில் தவராமல் மூன்று நான்கு பைரவர்கள் வீரப்பனை விட்டுவிட்டு என்னைத்தான் துரத்துவார்கள். காலையில் சூரியன் இருந்ததென்றால் தப்பிப்பேன்.

கையில் ஒரு பல்துலக்கும் ப்ரெஷ்ஷுடன், போர்க்கோலம் பூண்டு அந்த நாய்களுடன் குதிரையிலிருந்து வாள்சுழற்றும் படைத்தலைவனாக த்வந்தம் செய்தபடிதான் இன்ஸ்டிட்யூட்டை அடையவேண்டும்.

நல்லவேளை, இன்று பாக்கெட்டில் பேனா இருந்தது. சமாளிக்கலாம் என்று பாக்கெட்டில் கையை வைக்கப்போகும்போது, ஆச்சரியம். நாய் பின்வாங்க ஆரம்பித்தது. அதன் எல்லை முடிந்து 'நன்றி, மீண்டும் வருக'என்று சொல்லத்தோன்றி நின்றதா, இல்லை நிஜமாகவே நான் சைக்கிளை நிறுத்தப்போகிறேன் என்று பயந்துபோனதா தெரியவில்லை. ஒரு வழியாக தப்பித்தேன்.

அதனால்தான் நாய் ஒரு பிழைநிறைந்த தயாரிப்பு என்று தோன்றுகிறது. திருடன் வரும்போது குலைக்குமோ இல்லையோ, தவறாமல் வீட்டில் நண்பர்கள் வந்தால் குலைக்கும். மொட்டை மாடியில் போய் நிம்மதியாக நிற்கலாம் என்று வந்தால், போட்ட சாப்பாடு வீணாகக்கூடாது என்று சும்மாவாவது பக்கத்துவீட்டு நாய் குலைத்துவைக்கும்.

சைதாப்பேட்டைக்குள் இருக்கும் நாய்கள் கொஞ்சம் சமர்த்துப்பிள்ளைகள். துரத்த ஆரம்பித்ததும், சைக்கிளை ராட்சசத்தனத்துடன் திருப்பி எடுத்துக்கொண்டு மிரட்டிக்கொண்டே துரத்தினால், ஜகா வாங்கிவிடும். இருந்தாலும், எந்த நாயும் கொஞ்சம்கூட நாயாபிமானத்துடன் நடந்துகொள்வதே இல்லை.
Next comment

நானும் ஏதோ சாப்ட்வேர் பக் பத்தி ஏலியன் லேங்குவேஜ்ல ஏதேதோ சொல்லி கழுத்தை அறுக்கப் போறீங்களோனு நெனச்சேன்.. பேஷ் பேஷ். நல்ல உரை நடை பாஸ் :) நாய்க்கதை சூப்பருங்கோ :D
Murshid     04 ஆகஸ்ட் 2010
நானும் ஏதோ சாப்ட்வேர் பக் பத்தி ஏலியன் லேங்குவேஜ்ல ஏதேதோ சொல்லி கழுத்தை அறுக்கப் போறீங்களோனு நெனச்சேன்.. பேஷ் பேஷ். நல்ல உரை நடை பாஸ் :) நாய்க்கதை சூப்பருங்கோ :D
Murshid     04 ஆகஸ்ட் 2010
எதுக்கும் உங்க ஊரு அய்யனாரு கோவில்ல பைரவர் சிலை செஞ்சு வைக்கறதா வேண்டிக்கோங்க. அப்படியே நம்ம பீரு சித்தர்கிட்ட தாயத்து மந்திரிச்சு கட்டிக்கோங்க.. Or Simple Solution keep a Britania biscuit..
Venkatesh     04 ஆகஸ்ட் 2010
ரொம்ம நல்ல கதை.
Gnana Prakash     05 ஆகஸ்ட் 2010
தர்மக்கடி வாங்காமல் தப்பியதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் சாஃப்ட்வேர்காரர் சைக்கிளில் வருவது நம்பும்படியாக இல்லை.
ramalingam     05 ஆகஸ்ட் 2010
முர்ஷித், டெக்னிகலா எழுதாமலேயே ப்ளேடு போடும் படி எழுதும் கலை கைவந்துவிட்டது. நன்றி :-) வெங்கடேஷ், பிஸ்கெட்டை அது உணரும்முன் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டுமே. பேசாம ஐயனார்+பீர் தாயத்தை முயற்சிக்கிறேன். ப்ரகாஷ், நன்றி.
சு. க்ருபா ஷங்கர்     05 ஆகஸ்ட் 2010
ராமலிங்கம், "இன்றுபோய் நாளை வா"ங்கற கண்டிஷன்லதான் என்னை பெய்ல்ல விட்டுருக்குன்னு நெனக்கறேன். பாப்போம். சாஃப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறேன், அவ்வளவுதான். இந்த ஒருவேளையயாவது செஞ்சாதான் ஹார்ட் அட்டாக்காவது வராம இருக்கும் ;-)
சு. க்ருபா ஷங்கர்     05 ஆகஸ்ட் 2010





உங்கள் பெயர்/முகமூடிப் பெயர்
வலைப்பூ
மின்னஞ்சல்
தர்ம அடி